×

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான பதவிக்கு இன்று முதல்நிலை தேர்வு: நாடு முழுவதும் 5 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு இன்று நடக்கிறது. இந்தியா முழுவதும் சுமார் 5 லட்சம் பேரும், தமிழகத்தில் 30 ஆயிரம் பேரும் தேர்வு எழுதுகின்றனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான ேதர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு (2021ம் ஆண்டு) சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 712 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 4ம் தேதி அறிவித்தது. தற்போது, 5 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், தமிழகத்தில் மட்டும் 30 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

இவர்களுக்கான முதல் நிலை தேர்வு ஜூன் 27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவலை தொடர்ந்து இந்த தேர்வு அக்டோபர் 10ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வு இந்தியா முழுவதும் 73 நகரங்களில் இன்று நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் மட்டும் தேர்வு நடக்கிறது. காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை பொது அறிவு தேர்வும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவு தேர்வும் நடக்கிறது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தகட்டமாக மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.


Tags : First choice today for the post for jobs including IAS, IPS: 5 lakh people across the country are writing
× RELATED இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு